பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத் தடை
கொலை குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதைத் தடுத்து உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வெளிநாட்டுப் பயணத் தடையை குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வேங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

மனு தாக்கல்
இதற்கு மேலதிகமாக, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்குமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் கூட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரைக் கொலை செய்த குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
அந்த மரண தண்டனைக்கு எதிராக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர்களை குற்றமற்றவர்கள் என விடுவித்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அதற்கமைய அதனை செல்லுபடியற்றதாக்கி தண்டனை வழங்கி உத்தரவிடுமாறு கோரியும் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அம்மனு இன்று பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், மனு விசாரணையும் நிறைவடைந்தது. இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார செய்த கோரிக்கையைக் கருத்திற்கொண்டே மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.