இரவில் ஆட்டோவில் சென்ற யுவதிக்கு நேர்ந்த துயர சம்பவம்!
புத்தளம் முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்குனவில் பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டி ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அத்துடன், இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் முந்தல் விலபத்த பகுதியைச் சேர்ந்த 24 வயதான யுவதியே உயிரிழந்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்றிவு 11 மணியளவில் கீரியங்கள்ளி-ஆண்டிகம பிரதான வீதியின் அங்குனவில் பிரதேசத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வீதியோரத்தில் இருந்த வேப்பமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பயணித்த நிலையில் , 24 வயதுடைய யுவதி ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணும் காயமடைந்த நிலையில் முந்தல் மாவட்ட வைத்தியசாலையிலும் சிலாபம் பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த யுவதியின் சடலம் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக தெரிவித்த முந்தல் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.