சுட்டுக்கொல்லப்பட்ட சுற்றுலா வழிகாட்டி ; STFஇன் துப்பாக்கிச்சூட்டில் துப்பாக்கிதாரி பலி
அம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கொஸ்கொட பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி என பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசிய தகவல்
கடந்த 31 ஆம் திகதி கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துவமொதர கடலாமைகள் பாதுகாப்பு மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அறை ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
குறித்த மத்திய நிலையத்தின் உரிமையாளரின் மகனே இவ்வாறு கொலை செய்யப்பட்டதுடன் அவர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான துப்பாக்கிதாரி சூரியவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவகம பகுதியில் மறைந்து இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரப்படையினர் சந்தேக நபரை கைது செய்வதற்காக வெள்ளிக்கிழமை (22) அதிகாலை 5 மணியளவில் சம்பவ இடத்து சென்று விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது சந்தேக நபர் பொலிஸார் மீது கைக்குண்டு ஒன்றை வீசியுளளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் போதே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது பொலிஸ் விசேட அதிரப்படையினர் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் சூரியவெவ தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.