மகா சிவராத்திரி விடிய விடிய கண் விழித்து ஈசனை வணங்கினால் என்னென்ன பலன்கள் கி்டைக்கும்?
மகாசிவராத்திரி அன்று இரவு நான்கு கால பூஜை நடத்தப்படும். இதில் முதல் காலத்தில் பிரம்மா, சிவ பெருமானை வழிபடுவதாகவும், 2ம் காலத்தின் போது மகாவிஷ்ணு சிவனை வழிபடுவதாகவும், 3ம் காலம் பார்வதி தேவி சிவனை வழிபடுவதாகவும், 4ம் கால பூஜை என்பது தேவர்களும், மனிதர்களும் சிவபெருமானை வேண்டி, அவர்களுக்குரிய வரங்களை பெற்றுச் செல்லும் காலமாகும். இதனால் தான் மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதுமே கண் விழித்து, சிவ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என சொல்லப்படுகிறது.
ஆனால் அனைவராலும் இரவு முழுவதும் கண்விழிக்க முடியாது. உடல்நிலை, வயது உள்ளிட்ட பல காரணங்களால் இரவு முழுவதும் கண் விழிக்க முடியாது. அதுவும் இரவு முழுவதும் கோவிலில் இருந்து, அனைத்து பூஜைகளிலும் கலந்து கொள்வதும் பலருக்கும் மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும்.
இப்படிப்பட்டவர்கள் மகா சிவராத்திரியன்று இரவு முழுவதும் கண் விழித்து, சிவ வழிபாடு செய்த பலனை பெறுவதற்கு என்ன செய்யலாம் என்பதை வாங்க தெரிஞ்சுக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி திதியை சிவராத்திரி என்கிறோம். அதுவே மகா மாதம் என போற்றப்படும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியை மகா சிவராத்திரி என்று போற்றுகிறோம்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா மார்ச் 08ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் இரவு 08.19 மணிக்கு பிறகு தான் சதுர்த்தசி திதி துவங்குகிறது. அதனால் மகா சிவராத்திரி வழிபாடு செய்பவர்கள், சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இரவு 08.20 மணிக்கு பிறகே துவங்க வேண்டும்.
கோவிலில் நடக்கும் சிவ அபிஷேகம், பூஜைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்
மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் மார்ச் 08ம் தேதியன்று காலையில் குளித்து விட்டு, வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து, ஏதாவது நைவேத்தியம் படைத்து, சிறிது வில்வ இலை படைத்து சிவனை மனதார வழிபட வேண்டும். பிறகு வீட்டின் பூஜை அறையில் அமைதியாக அமர்ந்து, சிவசிவ என்றோ அல்லது ஓம் நவ சிவாய என்றோ வாய் விட்டு சொல்லுங்கள்.
எத்தனை முறை சொல்கிறீர்கள் என கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும் என அவசியம் கிடையாது. ஆனால் ஒரு மணி நேரம் நிதானமாக சிவ மந்திரத்தை தொடர்ந்து சொல்லுங்கள். இந்த வழிபாட்டினை செய்யும் போது ஒரு மணி நேரம் ஒரே இடத்தில் அமர வேண்டும்.
யாருடனும் பேசக் கூடாது. தரையில் ஒரு விரிப்பு விரித்து, அதன் மீது அமர்ந்து மந்திரத்தை சொல்லி, சிவனை தியானம் செய்யுங்கள்.
அதே போல் இரவு முழுவதும் கண்விழிக்க முடியாதவர்கள், மூன்றாம் கால பூஜையின் போது மட்டுமாவது கோவிலுக்கு சென்று, பூஜையில் கலந்து கொள்ளுங்கள். மூன்றாம் கால பூஜை என்பது சரியாக நள்ளிரவு 12 மணிக்கு துவக்குவார்கள்.
இது பார்வதி தேவி, சிவ பெருமானை வழிபட்டு, வரங்கள் பெற்ற நேரமாகும். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் பாவங்களையும் மன்னித்து, ஈசன் நல்லருளும், வேண்டிய வரங்களையும் தரும் காலம் இதுவாகும்.
இந்த மூன்றாம் கால பூஜையின் போது மட்டுமே சிவ பெருமானுக்கு தாழம்பூ சாத்தி வழிபாடு செய்யப்படும். இந்த நேரத்தில் நாமும் சிவ பூஜையில் கலந்து கொண்டு நம்முடைய பிரார்த்தனையை சொல்லி சிவ பெருமானிடம் வழிபட்டால், அந்த வேண்டுதல் அப்படியே நடக்கும்.