முச்சக்கர வண்டியின் மீது முறிந்து விழுந்த மரம்; மயிரிழையில் தப்பிய வயோதிப பெண்மணி
முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் வயோதிப பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இச் சம்பவம் வவுனியாவில் இன்றையதினம்(22) இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மன்னார் வீதி, குருமன்காடு சந்திப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன், அதில் வயோதிப பெண்மணி ஒருவரும் இருந்துள்ளார்.
இதன்போது தனியார் மருத்துவமனை முன்பாக வீதியில் நின்ற மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்துள்ளது.
மரம் முறிந்து விழுவதை அவதானித்த வயோதிப பெண்மணி, முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி ஓடியதால் பாதிப்புக்கள் இன்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
அதேவேளை, முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்ததால் முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது.
பின்னர் மரத்தின் கொப்புகளை வெட்டி முச்சக்கர வண்டியை மீட்ட போதும் அது முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.