மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை ; மூன்று ஆசிரியர்கள் கைது
இந்தியாவின் கிருஷ்ணகிரி பகுதியில் 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி பகுதியில் அரச பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவி கடந்த ஒரு மாத காலமாக பாடசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தால் பாடசாலையின் தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்துள்ளார்.
அதன் போது குறித்த மாணவி கர்ப்பமாக இருப்பதாக மாணவியின் தாயார் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது அவர் கல்விகற்ற பாடசாலையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் இருவரும் , ஒரு இடைநிலை ஆசிரியரும் சேர்ந்து குறித்த மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மாணவியால் காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர்கள் மூவரையும் பதவி நீக்கம் செய்ய முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த மாணவி சிறுவர் சீர்த்திருத்த நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை காண்பிக்க வலியுறுத்தி அச்சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் போது மாணவியின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.