1 லட்சத்தை நெருங்கும் தமிழத்தில் தஞ்சம் அடைந்தோர் எண்ணிக்கை!
அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் , 92,435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்குள்ளோ அல்லது வெளியேயோ தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதி முகாம்கள் இயங்கி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். தமிழக அகதி முகாம்களில் தற்போது 19,046 குடும்பங்களைச் சேர்ந்த 58,435 நபர்கள் தங்கியிருப்பதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 34,000 இலங்கையர்கள் இந்தியாவில் வேறு இடங்களில் வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தகைய நபர்கள் காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் மற்றும் நியமிக்கப்பட்ட அகதி முகாம்களுக்கு வெளியே உள்ள வளாகங்களில் தானாக முன்வந்து வாழ்கின்றனர்.
அத்துடன் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பெருமளவான இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு திரும்ப விரும்பும் நபர்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான தமது பரிந்துரைகள் மற்றும் தேவைகளை சமர்ப்பிக்க முடியும்.
இதன்போது தமிழகத்தில் பல தசாப்தங்களாக எஞ்சியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக மீள் குடியேற்றுவதற்கு தற்போதைய நிர்வாகம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படத் தயாராக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.