பிள்ளைகளை காணத்துடித்த தமிழ் பெண்ணின் கடைசி ஆசை; மருத்துவ குழுவின் மனிதாபிமானம்
உயிரிழக்கும் நிலையில் இருந்த தமிழ் பெண்ணின் கடைசி ஆசையை சிங்கப்பூர் மருத்துவ குழு நிறைவேற்றியுள்ளமையானது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி.
இவர் கணவர் ராஜகோபாலுடன் சிங்கப்பூரில் வசித்து வந்தநிலையில், ராஜேஸ்வரிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. அது முற்றியதால், திருச்சியில் உள்ள உறவினர்களிடம் வளரும், தன் 12 மற்றும் 9 வயது மகன்களை காணவேண்டும் என ராஜேஸ்வரி விரும்பியுள்ளார்.
எனினும் , கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்தியாவுக்கு சில விமானங்களே இயக்கப்பட்டதால், அவரை எப்படி தமிழ்நாட்டிற்கு அழைத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், ராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வந்த டன் டாக் செங் மருத்துவமனை, வெளியுறவு துறை அமைச்சகங்களிடம் பேசி, அவரை இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது.
விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்தான், அவருக்கு அனுமதி கிடைத்தது இது குறித்து, ராஜேஸ்வரியின் கணவர் ராஜகோபாலன் கூறுகையில்,
கடைசி நேரத்தில் அனுமதி கிடைத்ததால் விமானத்தில் எங்களுக்கு இடமில்லை. சக பயணியர் ஒருவர் மனது வைத்ததால் எங்களுக்கு இடம் கிடைத்தது. இந்தியா வந்து மகன்களை பார்த்த சந்தோஷத்தில், இரண்டு வாரங்களில் என் மனைவி இறந்து விட்டார்.
மகன்களை நேரில் பார்க்காமல் என் உயிர் போகாது என கூறிய அவர்ரின் கடைசி ஆசையை நிறைவேற்ற உதவிய டன் டாக் செங் மருத்துவமனைக்கு என்றும் தான் நன்றி கடன் பட்டுள்ளேன் என அவர் உருக்கமாக கூறியுள்ளார்.