தமிழர் பகுதியில் உயர்தரம் படிக்கும் மாணவிக்கு நேர்ந்த கதி ; பொதுமக்கள் அச்சம்
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற சங்கிலி பறிப்பு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தினம் சுமார் மாலை 3.30 மணியளவில், முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளைக்கு வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவியொருவர் குறிவைக்கப்பட்டார்.
தங்கச் சங்கிலி
அவர் பயணித்த துவிச்சக்கர வண்டியை இலக்கத்தகடு இன்றி விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் பின்தொடர்ந்து, மாணவி அணிந்திருந்த சுமார் முக்கால் பவுண் எடையுடைய தங்கச் சங்கிலியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதற்கு முன்னரும் கடந்த வாரம் இதே பகுதிக்கு அண்மையில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரிடமிருந்து ஒரு பவுண் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய குற்றச்செயல்கள் குறித்து பிரதேச மக்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர்களை அடையாளம் காணும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் இயங்கும் நபர்கள் மீது தீவிர ரோந்து கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.