கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீனப் பெண்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 53 வயதான சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன கடவுச்சீட்டு தரவுத்தளத்தில் சர்வதேச பொலிஸாரினால் பட்டியலிடப்பட்ட கடவுச் சீட்டுடன் இவர் நேற்று (26.10.2023) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சீன பெண்
சீனாவின் குன்மிங்கில் இருந்து நேற்றைய தினம் (26.10.2023) இரவு 9.30 மணியளவில் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் MU-213 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, சர்வதேச பொலிஸாரினால் பட்டியலிடப்பட்டுள்ள திருடப்பட்ட மற்றும் தொலைந்த கடவுச்சீட்டு தரவுத்தளத்தில் அவர் வழங்கிய கடவுச்சீட்டு இடம்பெற்றுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பெண்ணை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள எல்லை கண்காணிப்பு பிரிவினரிடம் பிரதான குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து அவர் கட்டுநாயக்கவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.