தமிழர்களின் சின்னங்கள் இல்லை, பௌத்த சின்னங்களே திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன ; விமல் வீரவன்ச
இந்துக்களின் தொல்பொருள் சின்னங்களுக்கு எவரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பௌத்த சின்னங்களே திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தையிட்டி திஸ்ஸ விகாரை
அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணியை அப்பிரதேசவாதிகள் போலியான காணி உறுதிப்பத்திரங்களுடன் கையகப்படுத்தியுள்ளனர்.
மிகுதியாகியுள்ள காணிகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்திக் கொள்வதற்கு தொடர்ந்து போராட்டங்களில் விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள்.
தையிட்டி விகாரையில் கடந்த வாரம் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்ற போது ஒரு தரப்பினர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து வெளியேறிள்ளார்கள்.
இதற்கான கட்டளையை இராணுவத் தளபதி பிறப்பித்துள்ளார். இந்த முறையற்ற செயற்பாடுக்கு அதிருப்தி வெளிப்படுத்தி மல்வத்து பீடம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. பிற மதத்தை சார்ந்த இராணுவத் தளபதி இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் இடங்களை பௌத்தம் மற்றும் இந்து என்று மத அடிப்பமையில் அடையாளப்படுத்த வேண்டாம் என்று தொல்பொருள் திணைக்களத்துக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியம் என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே ஆட்சியாளர்கள் அதற்கமைய செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.