இந்த நூற்றாண்டின் மிகபெரும் பேரழிவு ; 24 ஆயிரம் உயிர்களை காவுவாங்கிய பூகம்பம்!
இந்த நூற்றாண்டின் மிகபெரும் பேரழிவு என கருதப்படும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
உறங்கி கொண்டிருந்த நேரத்தில் துயரம்
அதிகாலை என்பதால் பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் பூகம்பம் தாக்கியது.
ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த பூகம்பம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த பூகம்பம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த பூகம்ப பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை மேலும் உயரும்
ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உலக நாடுகள் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் பூகம்பம் ஏற்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில் , தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் மொத்த உயிரிழப்பு 24 ஆயிரத்தை கடந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பூகம்பத்தால் , நிலைகுலைந்துள்ள துருக்கிக்கு உலகநாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில் அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.