டுபாயில் ஏவுகணை சிதறல்கள் விழுந்து விபத்து ; இலங்கையர் ஒருவர் உட்பட நால்வர் காயம்
டுபாயில் வான்வழித் அச்சுறுத்தல்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டபோது, அதன் சிதறிய பாகங்கள் விழுந்ததில் இலங்கையர் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் இலங்கையர் ஒருவர், இரு இந்தியர்கள் மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டவர் ஆகியோருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தெற்கு டுபாயில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் இந்தச் சிதறல்கள் விழுந்ததில் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களுக்கு அமைவாகக் கையாளப்பட்டதாக டுபாய் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று பலமுறை டுபாய் குடியிருப்பாளர்களுக்குப் பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளதுடன், அந்தச் சத்தங்கள் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் விளைவுதான் என்பதை டுபாய் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானில் இருந்து வரும் வான்வழி அச்சுறுத்தல்களைப் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து இடைமறித்து அழித்து வருவதால், ஏவுகணை அச்சுறுத்தல் நீங்கும் வரை குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
2026 பெப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தம் 178 பேர் காயமடைந்துள்ளதுடன், 11 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.