தமிழர் பகுதியில் கோவில் தகராறு ; இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை
வவுனியா - ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பாக இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் அவரது தாயாரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சட்டவிரோத செயலுக்கு அந்த இடத்திலிருந்த உயிரிழந்தவரின் தாயார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர் தாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவரது மகன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில், அது பின்னர் மோதலாக மாறியுள்ளது.
இதன்போது அந்த குழுவினர் மறைத்து வைத்திருந்த ஆயுதம் ஒன்றில் தாக்கப்பட்ட நிலையில் அவர் படுகாயமடைந்தார்.
இதனால் பலத்த காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே பலியானதுடன், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும், ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஓமந்தைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.