பிரதமருடனான சந்திப்பில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு பறந்த கடிதம் தொடர்பில் எழுந்த சர்ச்சை
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு அனுப்பிய வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
தங்காலையில் நடைபெற்ற ஆசிரியர் சந்திப்பொன்றில் கலந்துகொள்ளாமை தொடர்பில் விளக்கம் கோரி தங்காலை வலயக் கல்வி அலுவலகம் விடுத்த கோரிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அவ்வாறு செயற்படுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுரங்க சிந்தக தெரிவித்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தங்காலை பகுதியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆசிரியர்கள் கலந்துகொள்ளாமைக்கான காரணத்தை அறிவிக்குமாறு தங்காலை வலயக் கல்வி அலுவலகம் வலயத்திலுள்ள அதிபர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஹம்பாந்தோட்டை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சுரங்க சிந்தக பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர்களை அழைப்பது என்பது எவ்வகையிலும் செய்ய முடியாத ஒரு காரியம்.
எனவே, இந்தச் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது குறித்து ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்தும் பணிகளில் நாங்கள் மேலும் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஆசிரியர்கள் வீதியில் இறங்கி, கருப்புக் கொடி ஏந்தி, முந்தைய ஆட்சியை வீழ்த்தி புதிய யுகத்தை நோக்கி நகர்வதற்கு முன்னோடிகளாக இருந்தனர். ஆனால் இன்று முதன்முதலில் ஆசிரியர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.