2 ஆவது மாடியில் இருந்து மாணவனை தலைகீழாக தொங்க விட்ட ஆசிரியர்; பகீர் தகவல்
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் குழப்படி செய்த மாணவனை திருத்தவென, இரண்டாவது மேல் மாடியில் தலைகீழாக தொங்கவிட்ட தலமை ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதன்போது சக மாணவனை கடித்த சோனு யாதவ் என்ற 2ஆம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா அழைத்து கண்டித்துள்ளார். அதன் பின்னர் சக மாணவனிடம் மன்னிப்பு கேட்குமாறு சோனுவிடம் அவர் கூறியுள்ளார்.
எனினும் சோனு மன்னிப்பு கேட்காததால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் மாணவரை தரதரவென்று பள்ளி மேல் தளத்துக்கு இழுத்துச் சென்றார்.
அங்கிருந்து சிறுவனின் காலை பிடித்துக் கொண்டு மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு, மன்னிப்பு கேட்குமாறு பயமுறுத்தியுள்ளார். இதனால் சோனு அலறி அழத் தொடங்கியதால் சக மாணவர்கள் அங்குகூடியதையடுத்து அச்சிறுவனை தலைமை ஆசிரியர் விடுவித்தார்.
இந்நிலையில் சோனுவை தலைமை ஆசிரியர் தலைகீழாக தொங்கவிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா நேற்று கைது செய்யப்பட்டார்.
இது குறித்து சோனுவின் தந்தை ரஞ்சித் யாதவ் கூறுகையில், தலைமை ஆசிரியர் செய்தது தவறாக இருந்தாலும் எனது மகன் மீதான அன்பின் காரணமாகவே அவ்வாறு செய்துள்ளதாக கூறினாராம்.
தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா கூறும்போது, “சோனு மிகவும் குறும்புக்காரன். குழந்தைகள் மட்டுமின்றி ஆசிரியர்களையும் அவன் கடித்துள்ளான். அவனை திருத்துமாறு அவனின் தந்தை கூறியிருந்தார். எனவே நாங்கள் அச்சுறுத்த முயன்றதாக கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.