நீண்டகாலமாக சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இருவர் கைது
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று, தாளையடி பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த இருவர் நேற்று (20) மருதங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மணலுடன் டிப்பர் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த டிப்பரை பயன்படுத்தி பல ஆண்டுகளாக இரவு பகலாக மணல் கடத்தல் இடம்பெற்று வந்த நிலையில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அத்துக்கல தலைமையில் குறித்த பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டபோது இந்த கைது நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.

கைப்பற்றப்பட்ட டிப்பரையும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்கு மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.