வீட்டில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர்
கொழும்பு - பாதுக்க பகுதியில் ஆசிரியர் ஒருவர் வீடொன்றில் எரிந்த நிலையில் இன்று (31) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பாதுக்க, மின்விசுதுருகம, ஹல்பே பகுதியைச் சேர்ந்த 39 வயதான மொரடேகேஜ் நந்தகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொஸ்கம, மூணமலேவத்த கைப்பந்து மைதானத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிலேயே இவ்வாறு ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்கம காவல்துறை தெரிவித்துள்ளது.
பாடசாலை ஆசிரியரான இவர், ஹன்வெல்லவில் உள்ள இலுகோவிட்ட கல்லூரியில் கற்பித்து வருகிறார்.
குறித்த ஆசிரியர் வாடகைக்கு வீட்டில் தங்கியிருந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது உடல் தீப்பிடித்ததா மின் கசிவால் தீ ஏற்பட்டதா அல்லது தீப்பிடித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பாக கொஸ்கம காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.