டிக்டொக் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு சிக்கல் ; விசாரணை தீவிரம்
வெளிப்படைத்தன்மைக்கான விதிகளை சமூக ஊடக நிறுவனங்களான மெட்டா மற்றும் டிக்டொக் ஆகியன மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ் சாட்டியுள்ளது.
இதனால், அந்த நிறுவனங்கள் கோடிக்கணக்கில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக இருக்கவும், வெறுப்பு பேச்சு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தகவல்கள் குறித்தும், பயங்கரவாத தகவல்கள் தொடர்பாக முறைப்பாடு அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு என டிஜிட்டல் சேவை சட்டம் அறிமுகமாகியது.
இந்நிலையில், மெட்டா நிறுவனமும், டிக்டொக் செயலியும் இந்த சட்டத்தை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், பயனர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதுடன், அவர்களின் உரிமையை மதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் அணுக அனுமதிப்பது என்பது, டிஜிட்டல் சேவை சட்டப்படி, அத்தியாவசியமான விதிமுறைகள் ஆகும்.
இது பயனர்களின் மனம் மற்றும் உடல்நிலையை ஏற்படுத்தும் தாக்கம் குறித்த தகவல்களை வழங்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் மெட்டா மற்றும் டிக்டொக் மீது இந்த அமைப்பு விசாரணை நடத்தியது.
இதில், அந்த நிறுவனங்கள் தங்களது தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் அணுகுவதைத் தடை செய்தது தெரியவந்தது.

குழந்தைகள் பாலியல் தகவல்கள் மற்றும் பயங்கரவாதம் அடங்கிய தகவல்கள் குறித்து முறைப்பாடு அளிப்பதற்கு மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியன எளிதானதாக வைத்திருக்கவில்லை எனவும், குழப்பத்தை ஏற்படுத்துவதைப் போலவும் அந்த நிறுவனங்கள் செயல்படுவதாகவும் விசாரணை அறிக்கையில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை அடிப்படையில், இரண்டு நிறுவனங்கள் மீதும் ஐரோப்பிய ஒன்றியம் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த குற்றச்சாட்டுத் தவறானது, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இது குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதேபோல் டிக்டொக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.