பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற புலம்பெயர் தமிழர்களுக்கு நேர்ந்த கதி ; கொழும்பில் முறைப்பாடு
கொழும்பு மற்றும் லண்டன் இடையிலான விமானப் பயணச்சீட்டு விவகாரம் தொடர்பாக, பிரித்தானியாவின் லண்டனிலிருந்து இலங்கைக்கு திரும்பிய பல தமிழர்கள் உட்படப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டின்படி, லண்டன்–கொழும்பு இருவழிப் பயணத்திற்கான விமானப் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்த பயணிகளுக்கு சேவை வழங்க மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறைப்பாட்டை டனாடா டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ் (Donata Travels and Tours) என்ற பயண முகவர் நிறுவனம் செய்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் 2 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஈரானில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையை காரணமாகக் காட்டி, Qatar Airways நிறுவனம் பயணிகளுக்கு சேவை வழங்க மறுத்ததாகவும், ஆனால் பயணச்சீட்டு கட்டணத்தை திருப்பி வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த இரண்டு மாதங்களாக பணத்தைத் திருப்பி வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை நிதி மோசடி மற்றும் சட்டவிரோத பணக் கையாடல் எனும் குற்றங்களின் கீழ் வருவதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Qatar Airways நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அலுவலகம் கொழும்பு உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ளதுடன், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிராந்திய மேலாளராக ஜொனாதன் பெர்னாண்டோ பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.