இந்திய ரூபாயை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த பேச்சு ஆரம்பம்
இந்திய ரூபாவில் வர்த்தகத்தைத் தொடர்வதற்கான பேச்சுகளை இந்தியாவும் இலங்கையும் ஆரம்பித்துள்ளன. இந்தியாவும் இலங்கையும் ‘மின்சக்தி, எரிசக்தித்துறை மற்றும் ரூபாய் வர்த்தகம் தொடர்பான அம்சங்களில்’ இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த உள்ளது.
இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அதிகாரியான பிரமோத் குமார் மிஸ்ரா, இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை புதுடெல்லியில் சந்தித்து, கடன் மறுசீரமைப்பு உட்பட பல விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
10 ஆயிரம் இந்திய ரூபாய்களை வைத்திருக்க முடியும்
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்பு இலங்கையின் பொருளாதார மீட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை இலங்கை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார ஒருங்கிணைப்பின் ஊடாக இலங்கையில் இந்திய முதலீடுகள், மற்றும் சுற்றுலாத்துறை மேம்படுத்துதல், இருதரப்பு வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கையின் பல வங்கிகள் வொஸ்ட்ரோ கணக்குகள் எனப்படும் சிறப்பு ரூபாய் வர்த்தக கணக்குகளை திறந்துள்ளன. அதற்கமைய , இலங்கைப் பிரஜைகள் தற்போது 10 ஆயிரம் இந்திய ரூபாய்களை வைத்திருக்க முடியும்.
அதேசமயம் இந்திய தரப்பினர்களுடனான பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக இந்திய ரூபாயைப் பயன்படுத்தலாம் என்ற விடயம் தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த இந்திய அதிகாரி பிரமோத் குமார் மிஸ்ரா மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.