தமிழர் பகுதியில் ஊடகவியாளர் பிரியானின் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள்
திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியாளர் பிரியான் மலிங்க (வயது 34) மரணமடைந்ததற்கான பின்னணி குறித்து தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இவர் லிலாரத்ன மாவத்தை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
கடந்த மே மாதம் 17 ஆம் திகதி இரத்தனபுரியில் உள்ள மனைவியின் வீட்டிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற போது, ஹபரன கல்வங்குவ என்ற இடத்தில் அதிகாலை 1.40 மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக ஹபரன பொலிசார் தெரிவித்தனர்.
இன்று வரை 23 நாட்கள் கடந்தும் சம்பந்தப்பட்ட விபத்துக்கான விசாரணையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்று அவரது மனைவி கடும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் பல இடங்களில் இருந்து காட்சிகள் பெற்று ஹபரன பொலிசாரிடம் வழங்கியிருந்தும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது ஒரு அலட்சியமான அணுகுமுறையாகவே இருக்கிறது” என தெரிவித்தனர்.
பிரியான் மலிங்க ஒரு கடமை உணர்வுள்ள ஊடகவியாளராக பல சமூக பிரச்சனைகளுக்கு குரலாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது மரணம் குறித்து முழுமையான மற்றும் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.