ராஜீவ் கொலை வழக்கு: 32 ஆண்டுகளின் பின் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் திடீர் உத்தரவு
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதால பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரித்துவருகிறது என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ விசாரித்து வருவது எங்களுக்கு தெரியும். அது பற்றி பின்னர் முடிவெடுக்கலாம். இப்போது பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்குவது என நாங்கள் தீர்மானமாக உள்ளோம் என மீண்டும் மீண்டும் நீதிபதிகள் கூறினர்.
இந்நிலையில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு அடுத்தடுத்து பரோல் விடுப்பு வழங்கி உள்ளது. பேரறிவாளனுக்கு ஒவ்வொரு மாதமும் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டும் வருகிறது. கடந்த 10 மாதங்களாக பேரறிவாளன் பரோல் விடுப்பில் உள்ளார்.
இந்நிலையில் பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தம்மை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
இந்த விசாரணையின் போது, 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள். மேலும் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சர்வதேச பின்னணி குறித்த பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் விசாரணைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பேரறிவாளன் மனுவுக்கும் ஆளுநர் தரப்பின் கருத்துக்கும் தொடர்பு இல்லை எனவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இதையடுத்து இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க காலதாமதம் ஆகும்; தற்போது பரோல் விடுப்பில் இருக்கும் பேரறிவாளன், யாரையும் சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறார். பேரறிவாளன் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது போல் இருக்கிறார். ஆகையால் அவருக்கு இந்த வழக்கு முழுமையாக முடியும் வரை ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரும் பேரறிவாளன் மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.