இளம்பெண்ணிற்கு மந்திரவாதி செய்த சம்பவம் ; கால்களை கட்டி, மது கொடுத்து நடத்தப்பட்ட கொடூரம்
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு பேய் பிடித்திருக்கிறது என கூறி அவரை மந்திரவாதி ஒருவரிடம் விட்டுள்ளனர்.
அவர், பேயை விரட்டுவதற்காக சூனியம் வைக்கிறேன் என்ற பெயரில் இளம் பெண்ணை பல மணி நேரம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்து இருக்கிறார். அவரை பீடி புகைக்க வைத்தும், மது அருந்தவும் கட்டாயப்படுத்தியுள்ளார்.

பொலிசாரிடம் புகார்
பெண்ணின் மனநிலை மோசமடைந்த நிலையில், அவரது தந்தை பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக மந்திரவாதி, பெண்ணின் கணவர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த பெண் காதலித்து 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்து உள்ளார். கணவரின் தாய் மந்திரவாதியை அழைத்து வந்து சூனியத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவத்தன்று காலை 11 மணிக்கு தொடங்கிய அந்த சூனிய நிகழ்வு இரவு வரை நீடித்துள்ளது. இறுதியில் அந்த பெண் மயக்கமடைந்து இருக்கிறார். இந்த சூனிய சடங்கின்போது அவருடைய கால்களை கட்டி போட்டுள்ளனர்.
அவருக்கு, மது கொடுக்கப்பட்டதுடன், பீடி புகைக்க கட்டாயப்படுத்தி உள்ளனர். புனித சாம்பல் என கூறி அதனை கரைத்து, குடிக்க வைத்துள்ளனர். தீக்காயங்கள் உட்பட பிற வகையான உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு ஆளாகி இருக்கிறார்.
முக்கிய குற்றவாளியான மந்திரவாதி தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆண் நண்பரின் தாயார் தலைமறைவாக உள்ளார். கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார் ஆஜர்படுத்தினர்.