பொய் சொன்னாரா சுமந்திரன்? சர்ச்சையை கிளப்பிய அண்மைய காணொளி
அண்மையில் சுமந்திரன் வெளியிட்ட ஒரு காணொளியில் 2006 ஆம் ஆண்டில் உயர்தர பரீட்சை முடிவுகளின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 பிள்ளைகளுக்கு மருத்துவ பீடம் செல்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டபோது , தான் வழக்காடி அந்தப் பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பை பெற்றுக்கொடுத்ததாக சொல்லியிருந்தார்.
அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு வருடமும் அவரது வழக்கு காரணமாக பத்து பிள்ளைகள் மேலதிகமாக மருத்துவ பீடம் சென்றதாகவும் சொல்லி இருந்தார்.
அவரது ஆதரவாளர்கள் அவரது அந்த வீடியோவை கொண்டாடும் வேளை மறுபக்கம் அவர் அந்த காணொளியில் சொன்ன தகவல்கள் பொய் என பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்த வழக்கு 2006 ஒன்பது மாணவர்களால் போடப்பட்டு உள்ளது. இணைய செய்திகள் மற்றும் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில்,
2006 ஆம் ஆண்டு வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் 29 மாணவர்கள் அகில இலங்கை ரீதியான மெரிட் மூலமும் 39 மாணவர்கள் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் மூலமும் மருத்துவ பீடம் போயிருக்க வேண்டும்.
ஆனால் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி களின் அடிப்படையில் 28 பேரே தெரிவு செய்யப்பட்டதால் மேலும் எஞ்சியவர்களை மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கும் படி கோரிக்கை வைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவ பீடத்தை தவற விட்ட 11 பேரில் இருவர் பல் மருத்துவ பீடம் கிடைத்தால் அவர்கள் இருவரும் வழக்கில் ஈடுபடவில்லை. எஞ்சிய 9 பேருமே சுமந்திரன் மூலம் வழக்கே பதிவு செய்தனர்.
இந்த தகவல் உண்மையானது. ஆனால் இந்த வழக்கில் சுமந்திரன் வெற்றி பெற்று வழக்கு தொடுத்த 9 மாணவர்களுடன் சேர்த்து 10 பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து மருத்துவ பீடம் சென்றதாக சுமந்திரன் சொல்லியிருப்பது பொய்யான தகவல்.
அந்த வருடம் மருத்துவ பீட அனுமதிகளில் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல அகில இலங்கை ரீதியாக தவறு நடந்ததாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மீள் கணிப்பு நடத்தியது.
அதன் காரணமாக அகில இலங்கை ரீதியாக மேலும் 45 பேர் மருத்துவ பீடம் செல்ல வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அதில் 3 தமிழ் மாணவர்களும் உள்ளடக்கம் (வாய்ப்பு கிடைத்த இன்னொரு திருகோணமலை தமிழ் மாணவி அதை விரும்பாமல் பல் மருத்துவத்தை தொடர்ந்தார்)
யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு தமிழ் மாணவர்களும் மட்டக்களப்பில் இருந்து ஒரு தமிழ் மாணவனும் மருத்துவ பீடம் செல்ல வாய்ப்பு கிடைத்தது.
மற்ற 42 மாணவர்களும் மற்ற மாவட்டங்களில் இருந்தே தெரிவு செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து இராமநாதன் அர்ச்சுனா மற்றும் மேரி என்ற இருவரும் மட்டக்களப்பில் இருந்து லவபிரதன் என்ற மாணவனும் அந்த வாய்ப்பைப் பெற்றனர்.
வழக்கு ஆவணத்தை ஆய்வு செய்த தமிழ் சந்தி இணையம் இந்த மூன்று பேரும் சுமந்திரன் வழிநடத்தியதாக சொல்லும் வழக்கில் சம்பந்தப்படாதவர்கள் என்பதை உறுதி செய்தது.
அதாவது யாழில் பல் மருத்துவ பீடம் கிடைத்து ஏற்கனவே கற்கை நெறியை ஆரம்பித்ததன் காரணமாக சுமந்திரன் மூலம் வழக்கு போடாத இரு மாணவர்களே பல்கலைக்கழக மாணியங்களின் மீள் கணிப்பின் மூலம் மருத்துவ பீடத்துக்கு மீள் அழைக்கப்பட்டனர்.
உண்மையில் வழக்கு பதிந்த 9 பேரில் ஒருவர்கூட சுமந்திரனின் வழக்கினால் மருத்துவ பீடம் செல்லவில்லை.