செம்மணி மனித புதைகுழிகளில் 81 எலும்புக்கூடு தொகுதிகள் இதுவரை அகழ்ந்தெடுப்பு
யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மேலும் 02 எலும்புக்கூடு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், 05 எலும்புக்கூடு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 05 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில், மொத்தம் 25 எலும்புக்கூடு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் 16 எலும்புக்கூடு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இல-01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இல-02" என நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு 45 நாட்கள் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 20ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டன.
இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதியாக கடந்த 05 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு பணிகளில், இன்றைய தினத்துடன் 25 எலும்புக்கூடு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் 16 எலும்புக்கூடு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கட்டம் கட்டமாக 29 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 05 எலும்புக்கூடு தொகுதிகளுடன் சேர்த்து, மொத்தம் 81 எலும்புக்கூடு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இதுவரை 90 எலும்புக்கூடு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, கடந்த சில தினங்களில் அடையாளம் காணப்பட்ட சில எலும்புக்கூடு தொகுதிகள் முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை, எலும்புக்கூடு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட முறைமை, மற்றும் பிரேத பெட்டியில் வைக்கப்பட்டிருந்தமை ஆகியவை இதற்கு சான்றாக அமைந்துள்ளன.
இதனால், இவை முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டவை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவை மீண்டும் மண்ணால் மூடப்பட்டன.
மேலும், மனித புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, அவ்விடங்களில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
எதிர்வரும் நாட்களில் அப்பகுதிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.