நிலவில் 250 முறை ஏற்பட்ட திடீர் நில அதிர்வு ; இஸ்ரோ ஆய்வில் புதிய தகவல்
நிலவு என்பது முற்றிலும் அமைதியானதொரு துணைக்கோள் என்ற பொதுவான நம்பிக்கை நிலவி வரும் நிலையில், அதற்கு மாறாக அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் அனுப்பப்பட்டு, நிலவின் தென் துருவப் பகுதியான 'சிவசக்தி' களத்தில் தரை இறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை மேற்கொண்ட ஆய்வுகளிலேயே இந்த புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
குறித்த ஆய்வின் படி, நிலவின் சிவசக்தி பகுதியில் சுமார் 250க்கும் அதிகமான முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிர்வுகள் பெரும்பாலும் சிறிய அளவிலானவை என்றபோதிலும், சில அதிர்வுகள் பல மணிநேரம் நீடித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நிலவின் மேற்பரப்பிலிருந்து 10 சென்டிமீற்றர் ஆழம் வரை உள்ள மண் பகுதியானது வெப்பத்தைக் கடத்தாத கவசமாகத் தொழிற்படுவதை சந்திரயான்-3 உறுதி செய்துள்ளது.
அத்துடன் அங்குள்ள மண் அமைப்பில் மெக்னீசியம் தாதுக்கள் அதிகளவில் காணப்படுவதாகவும், நிலவு உருவான காலகட்டத்தில் மெக்னீசியம் ஒரு திரவ பிளாஸ்மாவாக செயற்பட்டிருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த அதிர்வுகள் மற்றும் மண் கட்டமைப்பு தொடர்பான தரவுகள், நிலவின் தோற்றம் மற்றும் அதன் உள்வடிவமைப்பு குறித்த மேலதிக ஆய்வுகளுக்குப் பெருமளவில் உதவும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.