மட்டக்களப்பில் குப்பைகள் கொட்டுவோருக்கு கடும் எச்சரிகை!
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாலைக்குள பறவைகள் சரணாலயத்தைச் சூழ்ந்த பிரதான வீதியில் குப்பைகள் கொட்டும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஈரநில அதி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சரணாலயப் பகுதி சுற்றிலும் சிலர் வாகனங்களில் வந்து குப்பைகளை மூட்டைகளாக கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அந்த வழியாகப் பயணிப்பதும் சிரமமாகியுள்ளது.

கடுமையான சட்ட நடவடிக்கைகள்
இச்சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் பலமுறை முறையிட்டுள்ளதுடன், குப்பை வீசுவோரைக் கையும் களவுமாகப் பிடித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க பிரதேச சபை தவிசாளர், குறித்த பகுதியில் CCTV கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளார்.
மேலும், தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டும் நபர்களுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர் மூலமாக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.