யாழ் ஆரியகுள புனரமைப்பு பணிகளை உடன் நிறுத்துங்கள்; கடும் தொனியில் சென்ற கடிதம்!
யாழ் ஆரிய குளத்தை புனரமைக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என கடும் தொனியில் கடிதம் அனுப்பிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்.நாக விகாரையை இல்லாதொழிப்பதற்கே ஆரியகுளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
யாழ் ஆரியகுளத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், சுற்றுலா பயணிகளை கவருவதற்கும், நகரின் மத்தியில் அழகை பேணுவதற்கும் இந்த முயற்சி மாநகரசபையினால் எடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ஆரியகுளத்தின் நடுவே தியான மண்டபம் அமைப்பதற்கு நாக விகாரையின் விகாராதிபதி கோரியதாக சர்ச்சைகள் உருவாகியிருந்த நிலையில் மீளவும் விகாராதிபதியினால் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு கடும் தொனியில் கடிதம் ஒன்று அனுப்பபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
முதல்வர் மணிவண்ணன் யாழ்.மாநகரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பௌத்த ஆலயத்தை இல்லாதொழிக்க முயற்சிப்பதாக விகாராதிபதி கூறியுள்ளதோடு, மாநகர முதல்வர் ஆரியகுளத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து மது அருந்துவதற்கும், கஞ்சா புகைப்பதற்கும் வழி செய்து கொடுத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அது பௌத்த கோவிலின் புனித தன்மையை பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், விகாரையின் திருவிழா காலங்களில் பக்தர்கள் தமது வாகனங்களை ஆரியகுளத்தின் அருகே நிறுத்துவார்கள் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆரிய குளத்தை புனரமைத்து இருக்கைகள் அமைக்கப்பட்டால் வாகன தரிப்பிடம் இல்லாமல் விகாரைக்கு நெருக்கடி உருவாகும் எனவும் அதன் ஊடாக விகாரையை இல்லாதொழிக்க முதல்வர் முயற்சிக்கிறார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதோடு , முன்னைய விகாராதிபதி இறந்தபோது அவருடைய உடலை தகனம் செய்வதற்கு எதிராக மணிவண்ணன் நீதிமன்றில் தடையுத்தரவு பெறுவதற்கு முயற்சித்ததையும் குறித்த கடிதத்தில் சாடியுள்ள விகாராதிபதி , தற்போது மணிவண்ணன் விகாரையின் இருப்புக்கே நெருக்கடியை உருவாக்குகிறார் எனவும் சாடியுள்ளாராம்.
இதேவேளை குறித்த கடிதம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அனுப்பபட்டபோதும் அது குறித்த தகவல்கள் எதனையும் மாநகரசபை வட்டாரங்களால் வெளியிடப்படவில்லை எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.