அறுகம்பே விடுதியில் சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி; விசேட அதிரடிப்படையினர் அதிரடி
இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
நேற்றையதினம் (31) ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் அருகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர்.

குளிக்கச் சென்ற தந்தை மற்றும் அவரது இரு மகள்கள்
தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில் குளிக்கச் சென்ற வேளையில், அங்கிருந்த நபர் ஒருவர் 3,200 அமெரிக்க டொலர்கள் மற்றும் 1,620 யூரோக்கள் அடங்கிய பணப்பையைத் திருடிச் சென்றுள்ளார்.
சந்தேகநபர் பணப்பையைத் திருடித் தப்பிச் செல்வதைக் கண்ட கடற்கரையிலிருந்த ஒருவர், உடனடியாக அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து அருகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டு சம்பவம் இடம்பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் திருடப்பட்ட பணத்துடன் சந்தேகநபரை பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் பணமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொத்துவில் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.