வவுனியாவில் பௌத்ததுறவிக்கு சிலை ; மாநகரசபையில் கோரிக்கை
மரணித்த பௌத்ததுறவி ஒருவருக்கு வவுனியாவில் சிலை அமைக்க இடம் வழங்க வவுனியா மாநகரசபையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மரணித்த பௌத்ததுறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம்
அதேவேளை உறுப்பினர் முகமட் முனவ்வர் வவுனியா தர்மலிங்கம் வீதியின் முகப்பில் உள்ள காணியில் இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் தூபி ஒன்றை அமைப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு கோரியுள்ளார்.
எனினும் துணை முதல்வர் கார்த்தீபன், அந்த பகுதியில் மரணித்த ஊடகவியலாளர்களிற்கான ஒரு பொது நினைவுத்தூபியினை நிறுவுவதற்கான அனுமதியை ஏற்கனவே கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு பதில் அளித்த முதல்வர் காண்டீபன் , சிலைகள் அமைப்பது தொடர்பாக முழுமையான தீர்மானத்திற்கூடாகவே செல்ல முடியும். சபை அங்கீகரித்து ஆளுனர் வரையில் அந்த விடயம் செல்லவேண்டும்.
எழுத்தில் மாத்திரம் கோரிக்கைகளை தருவதால் பயன்இல்லை. எனவே சமூகங்களிற்கிடையில் பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம். ஏற்கனவே எம்.ஜி.ஆர் சிலை ஒன்றை அங்கு வைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு அது தடுக்கப்பட்டிருந்தது.
எனவே விண்ணப்பங்களை கோருவோர் முழுமையான தகவல்களை வழங்கி அதனை சபைக்கு சமர்பிக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.