தொடருந்துகளில் அதிநவீன கேமரா!
இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை மற்றும் தொடருந்து மோதல்களைக் குறைக்கும் நோக்கில், அதிநவீன 'உணர்திறன் கெமரா' (Thermal Camera) கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் அமைச்சு,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள இந்த விசேட திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக நேற்று (11) தெமட்டகொட தொடருந்து நிலையத்தில் வைத்து இந்த கெமராக்கள் தொடருந்துகளில் பொருத்தப்பட்டன.

'புலதிசி' தொடருந்தில் ஒரு வார காலத்திற்கு சோதனை
இந்த கெமரா கட்டமைப்பு, 'புலதிசி' தொடருந்தில் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் இயக்கப்படவுள்ளது.
சோதனையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் இந்தக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சின் ஆலோசகர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கு மற்றும் மட்டக்களப்பு மார்க்கங்களில், குறிப்பாக வனப்பகுதிகள் வழியாகச் செல்லும் தொடருந்துகளின் சாரதிகள், இரவு நேரங்களில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தொடருந்து நிலைய ஊழியர்களுக்கு இது தொடர்பான விசேட பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தன்னார்வ சுற்றுச்சூழல் அமைப்புகளையும் இதில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சாரதிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் எச்சரிக்கைப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளதோடு மோதல்களைத் தவிர்க்கும் நோக்கில் தொடருந்து நேர அட்டவணைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.