இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம வடக்கிற்கு விஜயம்
முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ,வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ள நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் அவர் வடக்கிற்கு வந்துள்ளார்.
பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு விஜயம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று திங்கட்கிழமை (15) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
நீண்ட காலமாக புனர்நிர்மாண பணிகள் எதுவும் செய்யப்படாத நிலையிலுள்ள பரந்தன் இரசாயன தொழிற்சாலை மற்றும் தொழிற்சாலைக்கு சொந்தமான வயல் நிலங்களை முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார்.
230 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்ற குறித்த தொழிற்சாலையினை விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் உருவாக்கும் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யும் நோக்கில் அமைச்சரின் விஜயம் அமைந்திருந்தது.
இதன்போது அமைச்சருடன் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், அமைச்சின் அதிகாரிகள், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், கிராம சேவகர், கண்டாவளை பிரதேச செயலக காணி பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.