லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பட்டப்பகலில் பயங்கர சம்பவம் ; அச்சத்தில் மக்கள்
லண்டனின் நார்தோல்ட் பகுதியில் நடந்த ஒரு பயங்கர கத்திக்குத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 20-ம் தேதி (சனிக்கிழமை) மதியம் சுமார் 3:30 மணியளவில் நார்தோல்ட்டில் உள்ள ஹார்ன்பீம் குளோஸ் (Hornbeam Close) பகுதியில் நடைபெற்றுள்ளது.

திடீரென கேட்ட அலறல் சத்தம்
அமைதியான குடியிருப்புப் பகுதியான அவ்விடத்தில், திடீரென கேட்ட அலறல் சத்தத்தைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்களின் சைரன் சத்தங்கள் அப்பகுதியையே அதிரவைத்தன.
28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் குறிவைக்கப்பட்டு, சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லண்டன் ஆம்புலன்ஸ் சேவையினர் மற்றும் போலீசார், உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த இளைஞருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

தற்போது அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். “பலமுறை கத்தியால் குத்தப்பட்ட அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை” என மெட் போலீஸ் (Metropolitan Police) செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் , பட்டப்பகலில் இவ்வளவு துணிச்சலாகத் தாக்குதல் நடத்தியது யார் என்ற கேள்வி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் அரங்கேறிய இந்த சம்பவத்தால் அங்கு வாழும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.