புனித மிக்கேல் கல்லூரியின் இந்த ஆண்டிற்கான நடைபவனி
" புனித மிக்கேல் கல்லூரியின் இந்த ஆண்டிற்கான நடைபவனி 30-09-2023 அன்று நடைபெற்றது. இந்த ஆண்டு தமது 150 ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் காரணத்தினால் என்றுமில்லாதவாறு மிகப்பிரமாண்டமான முறையில் இந்த நடைபவனி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்கள் எங்கும் இது தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் ஆக்கிரமித்திருக்கும் நிலையில் அதையெல்லாம் தாண்டி பலரதும் பாராட்டை இரண்டு மயூரன்கள் பெற்றுவருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது.
ஒருவர் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. உமாமகேஸ்வரன் மயூரன், மற்றையவர் புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் திரு. தேவதாசன் மயூரன்.
நடைபவனியின் இறுதியில் தேவதாசன் மயூரனும் அவரது நண்பர்களும் (06 batch பழைய மாணவர்கள்) ஒரு உழவு இயந்திரத்தைக் கொண்டு சென்றதுடன் வீதியில் காணப்பட்ட குப்பைகளை அகற்றியவண்ணம் சென்றனர்.
இந்த சூழல் நேயச் செயற்பாட்டிற்காகவும், பொறுப்புணர்விற்காகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் இவரைப் பாராட்டி வருகின்றனர்.
அதே போன்று பல விடயங்களில் தமக்குப் போட்டியாகத் திகழும் ஒரு பாடசாலையாக இருந்த போதிலும் கல்விச் சேவையில 150 ஆண்டுகள் எனும் உயர்ந்த இலக்கை அடைந்தமையைப் பாராட்டியும் வாழ்த்தியும் புனித மிக்கேல் கல்லூரியின் நடைபவனி சென்ற வழியில் மெதடிஸ்த மத்திய கல்லூரியினரால் பதாகை கட்டப்பட்டிருந்தது.
இந்த சகோதரத்துவ செயற்பாட்டிற்காக உமாமகேஸ்வரன் மயூரனையும் அவரது அணியினரையும் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகினர்.
மனிதாபிமானச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் மதகு ஊடகம் இவ்விரு மயூரன்களையும் வாழ்த்துவதில் பெருமையடைகிறது." என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.