சொந்த மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்த இலங்கை அணி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய (11) மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
தம்புள்ளையில் இந்தப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாக இருந்த நிலையில் அங்கு தொடர்ந்தும் பெய்த மழை காரணமாக போட்டி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் குறித்தப் போட்டியானது மழை காரணமாக 12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 12 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் தசுன் சானக்க 5 சிக்ஸர்களை அதிரடியாக விளாசி 9 பந்துகளில் 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
குசல் மெண்டிஸ் 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் 161 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சல்மன் அஹா 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொத்தார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்மூலம் 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை 1க்கு 1 என்ற அடிப்படையில் தொடரை இலங்கை அணி சமன் செய்துள்ளது.