அர்ச்சுனாவுக்கு சவால் விடுத்த சிறீதரனின் மகன்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மகன் சாரங்கன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
சாரங்கன், தனது முகப்புத்தக பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில் இந்த சவாலை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இராமநாதன் அர்ச்சுனா, தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்ததாகவும் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்குமாறும் தெரிவித்தே அவர் இந்த பதிவை இட்டுள்ளார்.

அதன்படி, குறித்த பதிவில், "இன்று நாடாளுமன்றத்தில் “ஏதோ ஒரு சோலர் நிறுவனம் சாரங்கனுக்கு 30 மில்லியன் பணம் கொடுத்து அனுமதி பெற்றது” என்று ஒரு புதிய கட்டுக்கதையை கூறியிருக்கிறீர்கள்.
நீங்கள் என்னை பற்றி கூறிய விடயத்திற்கு ஏதாவது ஒரு ஆதாரம் இருந்தால் பகிரங்கமாக வெளியிட முடியுமா? அல்லது உறுதிப்படுத்த முடியுமா? உங்களுக்கு திராணி இருந்தால் நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் பதுங்கியிருந்து நீங்கள் கூறிய அதே கருத்தை பொதுவெளியில் பகிரங்கமாக சொல்லுங்கள்.
நான் சட்ட ரீதியாக அப்படி எந்த பணமும் பெறவில்லை என்று, அல்லது குறித்த நிறுவனத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நிரூபித்து காட்டுகிறேன்.
உங்கள் கருத்தில் உண்மை இருந்தால் பொதுவெளியில் கருத்தையோ ஆதாரத்தையோ வெளியிட தயங்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்“ என குறிப்பிட்டுள்ளார்.