3 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதல் ; முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
கடந்த 2023-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், துலக்கர்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் (வயது 67) என்பவர் 3 வயது சிறுவனிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய், மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, சோமசுந்தரத்தை கைது செய்தனர்.

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் நேற்று குற்றவாளிக்கு 7 1/2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி தாலுகா உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, மானூர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், மானூர் காவல்துறையினர், வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி (தற்போது தாழையூத்து காவல் நிலையம்), குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.