டுபாயில் கைதான குற்றவாளிகள் ; இலங்கை அதிகாரிகளுக்கு வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டுபாயில் மறைந்திருந்த குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதற்கமைய, பஸ் லலித் என்பவரை எதிர்வரும் திங்கட்கிழமை (24) நாட்டிற்கு அழைத்து வருவதற்காக சிறப்பு பொலிஸ் குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை குற்றம்
டுபாயில் பல இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.
அவற்றில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள கொண்ட ரஞ்சி, மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள எல்டோ தர்மே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக டுபாய் பாதுகாப்புப் படையினர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பொரளை வனாதமுல்ல பகுதியில் கடந்த காலத்தில் பல கொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வனாதே சத்து என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான பின்னணியில், கடந்த ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' என்ற குற்றவாளி எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளார்.
இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியவை அந்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.