அபுதாபியில் இலங்கை இளைஞருக்கு நடந்தது என்ன? கதறும் குடும்பத்தினர்
அபுதாபிக்கு வேலைக்காகச் சென்ற காலியை சேர்ந்த 24 வயது இளைஞன் இறந்துவிட்டதாக அவர் தொழில் புரிந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை இளைஞனின் உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்ற காலி - பத்தேகம, கோனாபினுவல பகுதியைச் சேர்ந்த கவிந்து சத்சர என்பவரே இவ்வாறு இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? கதறும் குடும்பத்தினர்
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கவிந்து சத்சர அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்று அங்குள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில், அவரது குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் தினமும் தொலைபேசி அழைப்பெடுத்து தொடர்பை பேணி வந்துள்ள நிலையில், கடந்த 6 ஆம் திகதி முதல் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு அவரது தொடர்பு எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
இது தொடர்பில் குடும்ப உறவினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (16) இளைஞன் தொடர்பில் தொழில் புரிந்த இடத்திற்கு தொடர்புகொண்டு கேட்ட போது அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இளைஞனுக்கு எவ்வித நோய்களும் இல்லை என்றும் அவர் தொழில்புரியும் நிறுவனத்தில் அவருக்கு எதிராக எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில் இளைஞனுக்கு என்ன நேர்ந்தது என்பதை விரைவில் கண்டறியுமாறும் அந்நாட்டு அரசும் பொறுப்பானவர்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .