இந்தியாவில் இலங்கை பிரதமர் ஹரிணி ; மோடிக்கு பறந்த அவசர கடிதம்
இலங்கையிடமிருந்து கச்சதீவை உடனடியாக மீட்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய 3 நாள் பயணமாக புதுடில்லி சென்ற நிலையில் இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கச்சதீவு விவகாரம்
அது மட்டுமின்றி இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழக மீனவ சமூகங்கள் தொடர்ந்து துன்பங்களை எதிர்கொள்கின்றனர்.
2021 முதல், 106 வெவ்வேறு சம்பவங்களில் 1482 மீனவர்களும் 198 மீன்பிடிப் படகுகளும் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மீனவர்கள் பெரும் துயரத்தையும் பொருளாதார இழப்பையும் எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். இந்தத் தீவு ஒன்றிய அரசால் மாநில அரசின் முறையான ஒப்புதலைப் பெறாமல் இலங்கைக்கு மாற்றப்பட்டது இந்த முடிவை 1974 முதல் தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இதன் விளைவாக, நமது மீனவர்கள் இப்போது தங்கள் பாரம்பரிய மீன்பிடித் தளங்களுக்குள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், அத்துமீறி நுழைவதாகக் கூறி அடிக்கடி துன்புறுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் கச்சதீவை மீட்பதற்கு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்