இலங்கை சுகாதார சேவை முடங்கும் அபாயம் ; GMOA எச்சரிக்கை
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக இலங்கையின் பொதுச் சுகாதார சேவை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (25) அவசரக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாஸ பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கடமைக்குச் சமூகமளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
உரிய தீர்வுகள் எட்டப்படாவிட்டால், அடுத்த வாரத்திற்குள் நாட்டின் மருத்துவமனைக் கட்டமைப்பு முழுமையாக முடங்கும் அல்லது கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஏனைய அரச துறை ஊழியர்களைப் போலன்றி, மருத்துவர்களுக்கு உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகளோ அல்லது எரிபொருள் கொடுப்பனவுகளோ வழங்கப்படுவதில்லை.
அவசர அழைப்புகள் மற்றும் மேலதிக நேரக் கடமைகளுக்காகத் தமது சொந்தச் செலவிலேயே அவர்கள் பயணிக்க வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது நடைமுறையிலுள்ள QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீடு, ஒரு வாரகாலக் கடமைகளுக்கு எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை என GMOA சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், எரிபொருள் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருப்பது நோயாளர் பராமரிப்புப் பணிகளைப் பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே இந்த இக்கட்டான நிலை குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இன்றைய அவசரக் கூட்டத்தின் போது சுகாதார சேவையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.