இலங்கை மீனவர் மீது தாக்குதல் நடத்தி சிறை பிடிப்பு; தமிழக மீனவர்கள் அடாவடி
இலங்கை மீனவர் ஒருவர் தமிழகத்தில் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் செருதூரிலிருந்து பைபர் படகில் கடந்த 25ம் திகதி மதியம் 12 மணிக்கு செருதூரில் இருந்து செருதூரை சேர்ந்த மூவரும், கன்னியாகுமரி உவரி பகுதியை சேர்ந்த ஒருவருமாக ஐவர் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் அடாவடி
26 ஆம் திகதி இரவு 11 மணியளவில் ஆற்காட்டுத்துறைக்கு தென் கிழக்கே 9 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது, அங்கு பைபர் படகில் வந்த 03 நபர்கள் செருதூர் மீனவர்கள் கடலில் விரித்திருந்த மீன்பிடி வலையை அறுக்க முற்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் ஏற்பட்ட தாக்குதலில் 02 நபர்கள் அவர்கள் வந்த பைபர் படகில் தப்பிச் சென்றுள்ளனர். மற்றொருவரை செருதூர் மீனவர்கள் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் இலங்கை காங்கேசன்துறை வளலாயைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து செருதூர் மீனவர்கள் இன்று (27) திங்கட்கிழமை காலை 08.00 மணிக்கு செருதூர் மீன்பிடி இறங்குதளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கடலில் மீனவர்கள் தாக்கியதில் இலங்கை மீனவருக்கு வலது கண் புருவம், இடது பக்க தலை ஆகிய இடங்களில் இரத்தக் காயமும், நெற்றியில் வீக்கமும் ஏற்பட்டதால் சிகிக்சைக்காக நாகப்பட்டினம் அரசு வைத்தியக் கல்லூரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கீழையூர் பொலிஸ் நிலையம் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.