இலங்கை பேருந்து சேவை நெருக்கடியில் ; திறைசேரியிடம் உதவி கோரிக்கை
அதிகரித்து வரும் உலகளாவிய டீசல் விலை மற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க, இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) திறைசேரியிடமிருந்து 1.91 பில்லியன் ரூபாய் அவசர நிதியொதுக்கீடு வழங்குமாறு போக்குவரத்து அமைச்சு ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி தம்மிக ரத்ன தெரிவித்ததாவது, கடந்த ஆண்டு ஊழியர்களின் வேதனச் செலவுகளை ஈடுசெய்ய அரசாங்கம் மாதம் சுமார் 274 மில்லியன் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு நிதி உதவி வழங்கியிருந்தது.
ஆனால் அந்த உதவித் திட்டம் தற்போது நிறைவடைந்துள்ளதால், அதிகரித்த செலவுகளை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உலக சந்தையில் டீசல் விலை உயர்வு மற்றும் அண்மையில் வழங்கப்பட்ட ஊழியர் சம்பள உயர்வு காரணமாக சபையின் இயக்கச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதன் விளைவாகவே தற்போதைய அவசர நிதி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறைசேரி நிதி உதவி தாமதமானாலும் பேருந்து சேவைகள் நிறுத்தப்படாது என உறுதியளித்த அவர், ஆனால் ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதில் கடுமையான சிக்கல்கள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளார். இதனால் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில், இலங்கை போக்குவரத்துச் சபை தற்போது பேருந்து கட்டண உயர்வுக்கான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண நிர்ணயம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தன்னிச்சையாக விலையை உயர்த்த முடியாது எனவும் கூறப்படுகிறது. நடப்பு நிதி நெருக்கடியை சமாளிக்க நிர்வாகம் உள்வாரி செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பொதுப் பேருந்துகளுக்கு எரிபொருள் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத நிலையில், அத்தியாவசியமற்ற பயணங்களை குறைக்கவும் அலுவலக பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து ஒரு அத்தியாவசிய சேவை என்பதால் பயணிகள் சேவைகள் தொடர்ச்சியாக இயங்கும் என்றும், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தரங்களில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும் தம்மிக ரத்ன உறுதியளித்துள்ளார்.