இலங்கை விமான போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை! (Video)
இலங்கை விமான போக்குவரத்து சேவை தொடர்பில் இலங்கை விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் தெரிவிக்கையில்,
இலங்கை விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களில் 19 பேர் ஒரு வருட காலத்திற்குள் பதவி விலகியுள்ளனர்.
இதன்காரணமாக இலங்கையில் செயல்படும் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் உள்ளது. மேலும் நான்கு அல்லது ஐந்து கட்டுப்பாட்டாளர்கள் வெளியேறினால் பணிப்புறக்கணிப்பு இல்லாவிட்டாலும் விமான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் ஊடாகவே விமான போக்குவரத்து சேவைகளை நாட்டுக்கு வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
இதன்போது இலங்கையின் வான்வெளியை அயல் நாட்டிற்கு இழக்க நேரிடும் என குறிப்பிட்ட அவர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.
நாட்டில் இடம்பெற்ற மேலதிக செய்திகளின் தொகுப்பு காணொளியில்....