நான்கு ஆண்டுகளின் பின் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு!
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளின் பின்னர் இந்தியாவில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. அதன்படி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று (15) லிட்டருக்கு சுமார் மூன்று ரூபாவினால் உயர்த்தப்பட்டன.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் உலகளாவிய மசகு எண்ணெய் விலையை சமாளிக்க அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் போராடி வரும் நிலையில் இந்த விலை உயர்வு வந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குடிமக்களுக்கு வேண்டுகோள்
விலை உயர்வைத் தொடர்ந்து, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.97.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.90.67 ஆகவும் உயர்ந்தது.
உயர்ந்து வரும் மசகு எண்ணெய் விலை இந்தியாவின் இறக்குமதிச் செலவுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சிறிது காலத்திலேயே அண்மைய எரிபொருள் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை தீவிரமடைந்து வரும் மேற்கு ஆசிய மோதலுடன் தொடர்புடைய மசகு எண்ணெய் நெருக்கடி மேலும் மோசமடைந்தால், வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.