இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் இன்னுமொரு ஆபத்து ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால், எதிர்வரும் 2026ஆம் ஆண்டு கடுமையான உணவுப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய விவசாய சம்மேளனத் தலைவர் அநுராத தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

விவசாயத்துறை
இந்த அனர்த்தத்தினால் விவசாயத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரக்கறிகள் மற்றும் பழச் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, மட்டக்களப்பு, குருநாகல், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நெற்செய்கைக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் முழுமையான சேதமடைந்துள்ளன.
கிட்டத்தட்ட 2 இலட்சத்து 53,000 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையாகவும், 4 இலட்சத்து 20,000 ஏக்கர் வயல் நிலங்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மரக்கறி பயிர்செய்கைக்குப் பயன்படுத்தப்பட்ட 30 ஆயிரம் ஏக்கர் முழுமையாகவும், 33 ஆயிரம் ஏக்கர் பகுதியளவிலும் அழிவடைந்துள்ளன.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்குப் முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய விவசாய சம்மேளனத் தலைவர் அநுராத தென்னகோன் தெரிவித்துள்ளார்.