வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பில் வெளியான அறிவிப்பு
வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்வித திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் வாகன இறக்குமதி
அரசாங்கம் மீண்டும் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது குறித்து, பரிசீலித்து வருவதாக அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இருப்பினும், அத்தகைய தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், அத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக எந்த விவாதமும் நடத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரிகள் ஊடாக, 200 பில்லியன் ரூபாயிற்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.