காட்டு யானைகளுக்காக இலங்கையில் உருவாகும் வைத்தியசாலை
காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், நோய்வாய்ப்படும் யானைகளுக்கு சிகிச்சையளிக்க வனவிலங்கு வைத்தியசாலை மற்றும் நடமாடும் வைத்திய பிரிவொன்றை நிறுவ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை வனவிலங்கு சரணாலயத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் இருந்த யானையைப் பார்வையிட்டபோது அமைச்சர் இந்த விடயத்தை வெளியிட்டார்.
வனவிலங்கு வைத்தியசாலை
யானையின் வலது காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மிகவும் மோசமான நிலைமையில் இருந்த குறித்த யானைக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யானைக்கு தேவையான உணவு மற்றும் பிற வசதிகளை களுந்தேவ வனவிலங்கு பிரிவு வழங்கி வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், தற்போது யானை அதன் முன் காலில் சிறிய அசைவுகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகிறது.
யானையின் சிகிச்சையை விரைவுபடுத்தி அனைத்து வசதிகளையும் வழங்கவும், ஸ்கேன் மற்றும் இரத்த மாதிரி பரிசோதனைகளை விரைவுபடுத்தவும் வனவிலங்கு பிரிவினருக்கு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.