ரஷ்யாவுக்கான விமான சேவைகள் தொடர்பில் இலங்கை திடீர் முடிவு
காப்புறுதி பிரச்சினை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான விமான சேவையை விரைவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக மாற்றுக் காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸினால் இயக்கப்படும் கட்டுநாயக்க - மொஸ்கோ நேரடி விமான சேவை நேற்று (28) முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களுக்கு காப்புறுதி செய்திருந்த பிரித்தானிய விமான நிறுவனமானது, ரஷ்யாவிற்கு பயணிக்கும் ஸ்ரீலங்கன் விமான காப்புறுதியை இரத்து செய்தமையே இதற்கு காரணமாக அமைந்தது.
இது இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானமல்ல எனவும் தமது நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதொரு விடயத்தினால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூக்கு தமது விமான சேவையை இடைநிறுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை - ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை இடைநிறுத்த எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்றும், இது ரஷ்யாவுக்கு எதிராக எடுக்கப்பட்டதொரு தீர்மானம் என வெளியாகும் செய்தியை முற்றாக நிராகரிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கடந்த வருடம் ஜூலை மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பித்தது.
அதன்படி வாரத்துக்கு 2 விமான சேவைகள் கட்டுநாயக்க - மொஸ்கோவுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டன.